திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.70 திருநனிபள்ளி - திருநேரிசை
முற்றுணை யாயி னானை
    மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச்
    சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துரகி யூறி
    உள்கசி யுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்
    நனிபள்ளி அடிக ளாரே.
1
புலர்ந்தகால் பூவும் நீருங்
    கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
    வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்
    சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
    நனிபள்ளி அடிக ளாரே.
2
எண்பதும் பத்தும் ஆறு
    மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
    கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
    செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
    நனிபள்ளி அடிக ளாரே.
3
பண்ணினார் பாட லாகிப்
    பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்
    கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி
    ஏபல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
    நனிபள்ளி அடிக ளாரே.
4
துஞ்சிருள் காலை மாலை
    தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும்
    அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி
    வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
    நனிபள்ளி அடிக ளாரே.
5
செம்மலர்க் கமலத் தோனுந்
    திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான்
    ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்
    நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்
    நனிபள்ளி அடிக ளாரே.
6
அரவத்தால் வரையைச் சுற்றி
    அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும்
    ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி
    வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
    நனிபள்ளி அடிக ளாரே.
7
மண்ணுளே திரியும் போது
    வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
    புழுப்பொதி பொள்ள லாக்கை(*)

(*) இப்பதிகத்தில் மீதமுள்ள அடிகள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
பத்துமோர் இரட்டி தோளான்
    பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள்
    படரும் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்
    பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்
    நனிபள்ளிப் பரம னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com